சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்
ஏழாம் திருமுறை
7.53 திருக்கடவூர் மயானம்
பண் - பழம்பஞ்சுரம்
மருவார் கொன்றை மதிசூடி     மாணிக் கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு     மகிழ்ந்து பூதப் படைசூழத் திருமால் பிரமன் இந்திரற்குந்     தேவர் நாகர் தானவர்க்கும் பெருமான் கடவூர் மயானத்துப்     பெரிய பெருமா னடிகளே.
1
விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்
    மார்பர் வேத கீதத்தர்
கண்ணார் நுதலர் நகுதலையர்
    கால காலர் கடவூரர்
எண்ணார் புரமூன் றெறிசெய்த
    இறைவ ருமையோ ரொருபாகம்
பெண்ணா ணாவர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.
2
காயும் புலியின் அதளுடையர்
    கண்டர் எண்டோட் கடவூரர்
தாயுந் தந்தை பல்லுயிர்க்குந்
    தாமே யாய தலைவனார்
பாயும் விடையொன் றதுவேறிப்
    பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.
3
நறைசேர் மலரைங் கணையானை
    நயனத் தீயாற் பொடிசெய்த
இறையா ராவர் எல்லார்க்கும்
    இல்லை யென்னா தருள்செய்வார்
பறையார் முழவம் பாட்டொடு
    பயிலந் தொண்டர் பயில்கடவூர்ப்
பிறையார் சடையார் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.
4
கொத்தார் கொன்றை மதிசூடிக்
    கோள்நா கங்கள் பூணாக
மத்த யானை உரிபோர்த்து
    மருப்பும் ஆமைத் தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள்
    பாடி ஆடப் பலிகொள்ளும்
பித்தர் கடவூர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.
5
துணிவார் கீளுங் கோவணமுந்
    துதைந்து சுடலைப் பொடியணிந்து
பணிமே லிட்ட பாசுபதர்
    (*)பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்
திணிவார் குழையார் புரமூன்றுந்
    தீவாய்ப் படுத்த சேவகனார்
பிணிவார் சடையார் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.

(*) பஞ்சவடியாவது மயிர்ப்பூநூல். இது மாவிரதியரென்னும் உட்சமயத்தாரணிவது ஆகும்.
6
காரார் கடலின் நஞ்சுண்ட
    கண்டர் கடவூர் உறைவாணர்
தேரார் அரக்கன் போய்வீழ்ந்து
    சிதைய விரலா லூன்றினார்
ஊர்தான் ஆவ துலகேழும்
    உடையார்க் கொற்றி யூராரூர்
பேரா யிரவர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.
7
வாடா முலையாள் தன்னோடும்
    மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்
கோடார் கேழற் பின்சென்று
    குறுகி விசயன் தவமழித்து
நாடா வண்ணஞ் செருச்செய்து
    ஆவ நாழி நிலையருள்செய்
பீடார் சடையார் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.
8
வேழம் உரிப்பர் மழுவாளர்
    வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்
ஆழி அளிப்பர் அரிதனக்கன்
    றானஞ் சுகப்பர் அறமுரைப்பர்
ஏழைத் தலைவர் கடவூரில்
    இறைவர் சிறுமான் மறிக்கையர்
பேழைச் சடையர் மயானத்துப்
    பெரிய பெருமா னடிகளே.
9
மாட மல்கு கடவூரில்
    மறையோ ரேத்தும் மயானத்துப்
பீடை தீர அடியாருக்
    கருளும் பெருமா னடிகள்சீர்
நாடி நாவ லாரூரன்
    நம்பி சொன்ன நற்றமிழ்கள்
பாடு மடியார் கேட்பார்மேற்
    பாவ மான பறையுமே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com